பெரிய பட இயக்குனர்களை லெப்ட் அன்ட் ரைட் வெளுத்து வாங்கிய ஜோதிகா..!


பொதுவாக முன்னணி இயக்குனர்களின், முன்னி நாயகர்களின் படங்களில் நடித்து தங்களை நம்பர் ஒன் நடிகையாக காட்டிக்கொள்ளவே நடிகைகள் பலரும் முற்படுவார்கள்.. இன்னொரு பக்கம் பல்க்கான சம்பளமும் காரணம்.. அதேசமயம் இயக்குனர்களோ அவர்களை சும்மா ஒப்புக்கு சப்பாணி ரோல்களில் மட்டுமே பயன்படுத்திக்கொள்வதும் வழக்கம் தான்..

பெரிய பட இயக்குனர்களின் இந்த போக்கு குறித்து தான் நடித்துள்ள ‘மகளிர் மட்டும்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய ஜோதிகா அவர்களை லெப்ட் அன்ட் ரைட் வெளுத்து வாங்கிவிட்டார்.. சரி ப்படி என்னதான் பேசினாராம்..?

“உங்களுடைய படங்களில் பெண்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்கள். அம்மா, தங்கச்சி, மனைவி என உங்களைச் சுற்றியிருக்கும் பெண்களின் கதாபாத்திரங்களை படங்களின் நாயகிக்கு கொடுங்கள். வீட்டில் இருக்கும் பெண்களைப் போன்று நாயகிக்கு உடைகள் கொடுக்க முடியாது என தெரியும்.

தயவு செய்து கொஞ்சம் அறிவாளித்தனமான கதாபாத்திரங்கள் கொடுங்கள். காமெடியன் அருகில் நிற்க வைத்து இரட்டை அர்த்த வசனங்களைப் பேச வைக்காதீர்கள். மிக கேவலமான அறிமுக காட்சியை கொடுக்காதீர்கள். படங்களில் நாயகி ஒருவர் நாயகன் பின்னால் ‘ஐ லவ் யூ’ என்று சொல்லிக் கொண்டே திரிவதை நிறுத்துங்கள்.

ஒரு நாயகனுக்கு 4 நாயகிகள் வைத்தீர்கள் என்றால், இளைஞர்களும் நம்மளும் 4 காதலிகள் வைத்துக் கொள்ளலாம் என எண்ணுவார்கள். படத்தில் ஒரு நாயகனுக்கு ஒரு நாயகி போதும். இந்தியாவில் இருக்கும் பெண்களுக்காக சமூக பொறுப்புடன் நடந்து கொள்வோம்” என தனது குமுறலை கொட்டியுள்ளார் ஜோதிகா.