முன்னாள் காதலி மீது சங்கத்தில் புகார் தொடுத்த மன்மதன்..!

“நானும் நயன்தாராவும் சண்டை போட்டுக்கொண்டு பிரியவில்லையே. இருவருக்குள்ளும் சின்ன மனஸ்தாபம் உண்டானதால் பிரிந்தோம்.. சண்டையிட்டுக்கொண்டிருந்தால் திரும்பவும் என்னுடன் படத்தில் நடிக்க சம்மதித்திருப்பாரா” என ‘இது நம்ம ஆளு’ படத்தில் நயன்தாரா நடிக்க முன்வந்தபோது பழுத்த பழம் போல பேசினார் நம்ம மன்மதன்..

ஆனால் அவர் சொன்னபடி நயன்தாரா பெருந்தன்மையுடன் நடந்துகொண்டது ஊருக்கே தெரியும்.. ஆனால் பட்ஜெட் எகிறியது, சொந்தமாக தயாரித்த டி.ஆர் படத்தை கிடப்பில் போட்டது என மன்மதன் தரப்பு காரணங்களால் தான் படம் தாமதம் ஆனது. இந்த களேபரத்தில் நயன்தாராவின் கால்ஷீட்டும் வீணானது.

ஒருவழியாக ‘வாலு’ பிரச்சனையை முடித்துவிட்டு ‘இது நம்ம ஆளு’ படத்தின் மீதியை முடிக்க நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் மன்மதன். நயன்தாரா என்ன வாய்ப்பு இல்லாமல் வீட்டில் உட்கார்ந்திருக்கும் நடிகையா, இவர்கள் நினைத்தபோது ஷூட்டிங் வைத்தால் உடனே வந்துவிட. அவரும் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார் தான்.

அதனால் கால்ஷீட் இல்லை என சொல்லி நடிக்க வரமுடியாது என்று கதவை சாத்திவிட்டார். கொதித்துப்போன மன்மதன், தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர்சங்கத்திலும் பிராது கொடுத்துவிட்டார். நடிகர் சங்கத்தில் நயன்தாராவை அழைத்து விசாரிக்க, தான் கொடுத்த கால்ஷீட்டை எல்லாம் வீணாக்கிவிட்டார்கள் என்றும், இனி தன்னால் தேதிகள் தரமுடியாது என்றும் கூறிவிட்டார்.

அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை, இன்னும் தனக்கு தரவேண்டிய சம்பள பாக்கியையும் வாங்கித்தரும்படி எக்ஸ்ட்ராவாக ஒரு அப்ளிகேஷனையும் போட்டுவிட்டு போயுள்ளாராம். இதற்குத்தான் உடன் நடிக்கும் நடிகையை காதலிக்க கூடாது, அல்லது ஏற்கனவே காதலித்து பிரிந்த நடிகையை மீண்டும் நடிக்க அழைத்திருக்க கூடாது என மன்மதனின் நட்பு வட்டாரம் அவரை ஆசுவாசப்படுத்தி வருகின்றனராம்.