‘பாயும் புலி’யை காயடிக்க முயற்சிக்கும் சிங்காரவேலன்..!

சினிமாவை பொறுத்தவரை எங்கேயும் எதையும் மிச்சம் வைக்க கூடாது என்று சொல்வார்கள் அனுபவப்பாடம் கற்றவர்கள். ‘பாயும் புலி’ படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருக்கும் வேளையில் அந்தப்படத்தை திரையிட விடாமல் முடக்க மேற்கொள்ளப்படும் சிலரின் நடவடிக்கைகளை பார்த்தால் அது உண்மைதானோ என்றுதான் தோன்றுகிறது.

‘லிங்கா’ படத்தை விநியோகம் செய்த வகையில் ஏற்பட்ட நட்டக்கணக்கை ராக்லைன் வெங்கடேஷிடம் வாங்கிய பணத்தைக்கொண்டு வேந்தர் மூவிஸ் நிறுவனம் அரைகுறையாக மற்றவர்களுக்கு செட்டில் செய்து அப்போதைக்கு தப்பித்தால் போதும் என எஸ்கேப் ஆனது.. ஆனாலும் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் விநியோகஸ்தர் சிங்காரவேலன் இன்னும் சில பாதிக்கப்பட்ட நபர்களை ஒன்று சேர்த்து கறுவிக்கொண்டுதான் இருந்தார்.

இதோ இப்போது வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் விஷால் நடித்த ‘பாயும் புலி’ படம் வரும் வெள்ளியன்று ரிலீஸாக இருக்கும் வேளையில் தியேட்டர் அதிபர்களிடம் அந்தப்படத்தை திரையிட வேண்டாம் என சிங்காரவேலன் கூறிவருகிறாராம்.. செங்கல்பட்டு மாவட்ட விநியோகஸ்தர் சங்கத்தில் ‘பாயும் புலி’க்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ளதாகவும் தகவல்..

படத்தை வெளியிடாமல் தடுப்பதாகவும், தங்களை மிரட்டுவதாகவும் இது குறித்து சிங்காரவேலன் மீது போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.. அனேகமாக விரைவில் சிங்காரவேலன் மீது நடவடிக்கை பாயும் என்றும் பேசிக்கொள்வதால், ‘பாயும் புலி’ பாய்வதற்கு எந்த தடையும் இருக்காது என்றே சொல்கிறார்கள்.