ரசிகர்களுக்குப் போட்டி வைக்கும் இளையராஜா!

கடந்த நாற்பது ஆண்டுகளாக இசைத் துறையில் கோலோச்சி வரும் இளையராஜா, முதல் முறையாக தன் ரசிகர்களுக்கு ஒரு நேரடிப் போட்டி நடத்துகிறார்.

இந்தப் போட்டி அவரது இசை தொடர்பானதுதான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் இதுவரை ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள இளையராஜா, அந்தப் படங்கள் மற்றும் பாடல்களின் அடிப்படையில் போட்டியை நடத்துகிறார்.

போட்டியில் இடம்பெற விரும்புவோர், இளையராஜா இசையமைத்த இந்தப் படங்களில் இடம்பெற்ற பாடல்கள், அவற்றை எழுதியவர்கள், படத்தின் இயக்குநர், பாடியவர்கள், தயாரிப்பாளரகள், படம் வெளியான தேதி போன்றவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இந்த முழு விவரங்களையும் யார் சரியாக திரட்டித் தருகிறார்களோ அவர்களுக்கே முதல் பரிசு. ரசிகர் திரட்டித் தரும் தகவல்களை, இளையராஜாவிடம் உள்ள தகவல்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, சரியாக இருந்தால் பரிசு தரப்படும்.

சரியான தகவல்களைத் திரட்டித் தரும் ரசிகரை, இளையராஜாவே நேரில் அழைத்து பரிசுகளை வழங்கவிருக்கிறார்.

என்ன பரிசு, எந்தத் தேதியில் போட்டி என்பதையெல்லாம் இளையராஜாவே விரைவில் அறிவிக்கிறார்.