டைரக்டருக்கு சம்பளமே தரலை.. இதுல வசூல் 100 கோடியாம்.!

ஆராம்பிச்சுட்டாங்கய்யா.. ஆரம்பிச்சுட்டாங்க என்று சொல்லும் வகையில் விஜய், அஜித் என யாருடைய படங்கள் வந்தாலும் வந்த ஒரு வாரத்துக்குள் நூறு கோடி வசூலை தாண்டிவிட்டது என, படத்துக்கு சம்பந்தப்பட்டவர்கள் சொல்கிறார்களோ இல்லையோ, சில மீடியாக்காரர்கள் பாக்ஸ் ஆபிஸ் செக்சனில் கிளார்க் வேலை பார்த்தவர்கள் மாதிரி கணக்கு சொல்லி விடுகிறார்கள்..

புலி படத்துக்கு இப்படித்தான் படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து சூப்பர் வசூல் என அள்ளிவிடப்பட்டது. ஆனால் விநியோகஸ்தர்களோ எங்களுக்கு நட்டம், அதை அடுத்த படத்தில் விஜய் சரிசெய்ய வேண்டும் என இப்போதே புலம்பல் அப்ளிகேஷனை போட்டுவைத்துவிட்டார்கள். இதில் ஸ்ரீதேவி, ஸ்ருதிக்கெல்லாம் சம்பள பாக்கி வேறு.

இப்போது அதேபோல் அஜித்தின் ‘வேதாளம்’ படத்திற்கும் வேலையை ஆரம்பித்துவிட்டார்கள் இந்த செக்சன் கிளார்க்குகள்.. அவர்கள் கணிப்புபடி வேதாளம் நூறுகோடி ரூபாய் கிளப்பில் இணைந்துவிட்டது.. உறுப்பினர் கார்டு வாங்க வேண்டியதுதான் பாக்கியாம். இது உண்மையா என விசாரித்தால், அட போங்கய்யா, இன்னும் டைரக்டருக்கே சம்பள பாக்கி செட்டில் பண்ணாம இருக்கு.. இதுல நூறு கோடியாம்.. நூறு கோடி.. போய் பிள்ளைங்கள படிக்க வைக்கங்கய்யா என கன்னத்தில் கை வைக்கிறதாம் வேதாளம் யூனிட்.